கர்நாடக பிரிமியர் லீக் கோப்பை அறிமுக விழா
பெங்களூரு: கர்நாடக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பை அறிமுக விழா பெங்களூருவில் நடைபெற்றது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் கர்நாடக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் விரைவில் தொடங்குகிறது. இதற்கான அணிகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில் கோப்பை அறிமுக விழா, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சுதீப், முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக கிரிக்கெட் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் தேசாய், செயலர் சுதாகர்ராவ் ஆகியோர் செய்திருந்தனர். சஞ்சய் தேசாய் ஒவ்வொரு அணியையும் அறிமுகம் செய்து பேசினார். இதையடுத்து மாஜிக் நிபுணர் ஆகாஷ், தனது பாணியில் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். ஆகாஷ் மேஜிக் செய்து கோப்பையை எடுத்துக் கொடுக்க கன்னட நடிகர் சுதீ்ப் அதை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுதீப் கூறியதாவது: கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் சில போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். கிரிக்கெட்டை மன அமைதிக்காக என்று நினைத்தே விளையாடுவேன். அனைத்து வீரர்களும் இதை மனதில் கொண்டு விளையாட வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் எனக்கு பிடித்த அணிகள்தான். போட்டி சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இதில் விளையாடும் வீரர்களுக்கு வரும் காலங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடும். அதை கருத்தில் கொண்டு, முனைப்புடன் விளையாட வேண்டும். அடுத்த சீசனில் நானும் விளையாட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ,ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விளையாடுவது குறித்து அந்த நேரத்தில் தான் கூற முடியும். இருப்பினும் என்னை விளையாட அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.