நேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் அதிகாரி பாராட்டு

தினமலர்  தினமலர்
நேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் அதிகாரி பாராட்டு

நடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‛நேர் கொண்ட பார்வை'. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருக்கிறார்.

இந்தப்படம் கடந்த 8ல் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய வசூலை எட்டும் என் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் இந்தப் படத்தை, பெண்கள் உரிமை பேசும் படமாக சிலர் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தை வரவேற்றும், இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் அஜித்தை பாராட்டியும் போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ஜுன் சரவணன், நேர்கொண்ட பார்வையும் “காவலனுக்கான” தேவையும் ! என்ற தலைப்பில், முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அவரது அந்தப் பதிவு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அர்ஜுன் சரவணனின் பதிவு:

நடிகர் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர் கொள்வது என்பதை, நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும், பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.

நடிகர் அஜித்தின் திரைப் பயணத்தில், இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.

சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக் காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்து விட்டார்.

பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்...

* பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்வதன் மூலம், எந்த ஒரு அவசர நிலையிலும், ஒரு க்ளிக் மூலம், காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ; புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.

* குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது. இவ்வழக்குகளில் ஜாமின் கிடைப்பதும் கடினம்.

* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.

*அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.

பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை.

நேர் கொண்டபார்வை இக்காலத் தேவை!

இவ்வாறு அர்ஜுன் சரவணன் பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை