உற்சாகத்தில் கேப்டன் கோஹ்லி | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
உற்சாகத்தில் கேப்டன் கோஹ்லி | ஆகஸ்ட் 12, 2019

 போர்ட் ஆப் ஸ்பெயின்: ‘‘விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

விண்டீஸ் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘பேட்டிங் ஆர்டரில் ‘டாப்–3’ வீரர்களில் யாராவது ஒரு ‘சீனியர்’ பொறுப்பாக செயல்பட்டு பெரியளவு ஸ்கோர் எடுக்க வேண்டும். ரோகித், தவான் குறைந்த ரன்னுக்கு திரும்பி விட்டனர். இதனால்  எனக்கான வாய்ப்பு வந்தது. 65 ரன்கள் எடுத்த போது, சற்று சோர்வு ஏற்பட்டது. ஆடுகளமும் கடினமாக இருந்தது, மழை வந்ததால் சற்று பேட்டிங் எளிதானது. கடைசியில் சதம் அடித்தது மகிழ்ச்சி,’’ என்றார்.

திருப்பம் எது

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் கூறுகையில்,‘‘பூரன், போட்டியை அவர்கள் பக்கம் சாதகமாக கொண்டு செல்வார் எனத் தெரியும். இந்நிலையில் எப்படியும் ஓரிரு விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டால், இந்திய அணிக்கு சாதகமாக மாற்றி விடலாம் என நம்பினோம். இந்நிலையில் பூரன் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்தது. ராஸ்டன் சேஸ் வீழ்ந்ததும் கூடுதல் சாதகம் ஆனது,’’ என்றார்.

 

பாராட்டு

புவனேஷ்வருடன் இணைந்து எடுத்த போட்டோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கோஹ்லி,‘சிறந்த வெற்றி, புவனேஷ்வரின் அசத்தலான பந்து வீச்சினால் கிடைத்தது,’ என தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை