ரயில்வேத் துறைக்கு புதிய நிதி ஆதாரங்களை திரட்டும் வழிவகைகளை…
ரயில்வேத் துறைக்கு புதிய நிதி ஆதாரங்களை திரட்டும் வழிவகைகளை ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை குறைந்த போதிலும் ரயில் கட்டணம் குறையாது என ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். அதேநேரம், ரயில்வே வருவாயை அதிகரிக்க, சரக்குக் கட்டணத்தை சிறிதளவு உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஏற்படும் இழப்பை சரக்கு ரயில் வருவாயில் 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஈடுகட்டுவதை குறைப்பதற்கான அறிவிப்புகளை சுரேஷ் பிரபு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரயில்வே திட்டங்களில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான அறிவிப்புகளும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 676 திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டது.