ஹபீஸ் சயீதுக்கு ஆக.31 வரை முன்ஜாமின்

தினமலர்  தினமலர்
ஹபீஸ் சயீதுக்கு ஆக.31 வரை முன்ஜாமின்

லாகூர் : மதப் பள்ளி நடத்த தரப்பட்ட நிலத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துவதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மூவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து ஹபீஸ் சயீது தலைவராக உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா, பலாஹே இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து பாக். அரசு கண்காணித்து வருகிறது.


ஜமாத் உத் தாவா அமைப்பின் சார்பில் பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட மதப்பள்ளிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த மதப்பள்ளிக்காக தரப்பட்ட நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக ஹபீஸ் சயீது மற்றும் அவருக்கு நெருக்கமான மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சயீது சார்பில் லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் ஆக. 31 வரை முன்ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையே தன் மீது தொடரப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கு பண உதவி பண மோசடி வழக்குகளை எதிர்த்து ஹபீஸ் சயீது சார்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி பாக். அரசு பஞ்சாப் மாகாண அரசு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை