வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது  ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தடை விதித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.  இதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்நிலையில், கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே  உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. இந்த வான்வழி நள்ளிரவு 12.41 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் விரைவில் பறக்கத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை