கே.பாலசந்தர் வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும்

தினமலர்  தினமலர்
கே.பாலசந்தர் வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும்

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த கே.பாலசந்தர். இவரின் 90வது பிறந்தநாளையொட்டி அவரின் உதவியாளர் மோகன் நடத்திய கேபி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிவகுமார் பேசியதாவது:

இயக்குனருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது பாலசந்தர் தான். வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் 'அக்னி சாட்சி'. அதைவிட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.? ஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது என்றார்.

விழாவில் சமுத்திரக்கனி, தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம்எஸ்.பாஸ்கர், ராஜேஷ், ஆர்கே.செல்வமணி, ஆர்பி.உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேசிய அனைவரும் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை ஆவணப்படுத்த வேண்டும், அவருக்கு சிலை வைக்க வேண்டும், அவரது பெயரில் விருது அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினார்கள்.

மூலக்கதை