கொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் நான்கைந்து இடங்களில் உள்ளன. அதுபோல் விக்டோரியா உள்ளிட்ட மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் டாக்டர்களுக்கு பல்வேறு சுகாதார வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் தங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதால் டாக்டர்கள் ,நர்சுகள் உள்ளிட்டோருக்கு மன அழுத்தம் அதிகமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மன அழுத்தம் நீங்குவதற்கு நடனம், நகைச்சுவை துணுக்குகளை கூறுதல் உள்ளிட்ட சில யுக்திகள் கையாளப்பட்டது. சிகிச்சை முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு 30 நிமிடம் டாக்டர்கள் தினமும் ‘ஹாப்பி டான்ஸ்’ ஆடலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி டாக்டர்கள் முழு கவச உடையுடன் நடனம் ஆடி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “கொரோனா கிட் உடை அணிவதால் இருக்கமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். இதை போக்க, தற்போது, நடனம் ஆடி வருகிறோம். இதனால், எங்கள் மனதிற்கு உற்சாகம் கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்குகிறது. மேலும், சில டாக்டர்கள் மொபைலில் படம் பார்த்து மகிழ்கின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்’’ என்றனர்.