கட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு வரும் 8 முதல் பல தளர்வுகள்

தினமலர்  தினமலர்
கட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு வரும் 8 முதல் பல தளர்வுகள்

புதுடில்லி,: நாளை முதல், ஜூன் 30 வரை, பொது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், ஷாப்பிங் மால், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வரும், 8ம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியூர் செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பெற்றோர் சம்மதத்தை கேட்டு, பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, ஜூலையில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும், தொற்று பரவல் நிலைக்கேற்ப, எந்தெந்த இடங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம், எங்கு கட்டுப்பாட்டை தொடர வேண்டும் என்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24ல், நாடு தழுவிய பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கின்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த ஊரடங்கு இன்று முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், சமீபத்தில் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்; பின், முதல்வர்கள் தெரிவித்த கருத்துக்களை பிரதமர் மோடியிடம் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பாக புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டத்தின் கீழ், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், ஜூன், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால், விருந்தோம்பல் துறை ஆகியவை, ஜூன் 8ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவை செயல்படும்போது, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள், சமூக விலகல் ஆகிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* பள்ளி, கல்லுாரி, பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை துவக்குவது குறித்து, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்து, நிலைமைக்கு ஏற்றபடி, ஜூலை மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும்.

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. இதற்காக, தனியாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.
அதேநேரத்தில், வைரஸ் பாதிப்பின் அடிப்படையில், மாநில அரசுகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினால், அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை.

*வைரஸ் பரவலின் சூழலை அடிப்படையாக வைத்து, நிலைமைக்கு ஏற்ப, எதிர்காலத்தில், சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பொழுது போக்கு பூங்கா, கருத்தரங்கு கூடம், சமூக கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

* வைரஸ் பாதிப்பு பகுதிகளில், தனிநபர் நடமாட்டத்துக்கு, இரவு, 7:00 மணியிலிருந்து, காலை, 7:00 மணி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது தளர்த்தப்பட்டு, இரவு, 9:00 லிருந்து, அதிகாலை, 5:00 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.

* தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கான சிறப்பு ரயில், உள்நாட்டு விமான போக்குவரத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமான போக்குவரத்து ஆகியவை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.


வைரஸ் பாதிப்பு சூழலை அடிப்படையாக வைத்து, கட்டுப்பாட்டு பகுதிகளை, அந்தந்த மாவட்ட அதிகாரிகளே வரையறை செய்யலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த பகுதிகளில், பரிசோதனை, கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைளை தீவிரப் படுத்த வேண்டும்.
வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, குறைவாக உள்ள பகுதிகளை, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே அடையாளப்படுத்தலாம். பாதிப்பு எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, எந்தெந்த தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.
முக கவசம் அணிவது, சமூக விலகல் நடைமுறை ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோருடன் ஆலோசிக்க உத்தரவு



ஆகஸ்டில் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஜூலையில் பெற்றோருடன் கலந்தாலோசனை நடத்தி, அவர்கள் சம்மதம் பெற்ற பின்னரே திறக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியே வராதீங்க



ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை