பிளாய்ட் கொலை: அமெரிக்க சட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த கறுப்பினத்தவர்கள்

தினமலர்  தினமலர்
பிளாய்ட் கொலை: அமெரிக்க சட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த கறுப்பினத்தவர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதால் அங்கு போராட்டம் வெடித்தது. அங்குள்ள கறுப்பின மக்கள், வெள்ளை இன அதிகாரிகளால் தொடர்ந்து கொல்லப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனாலும், அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைவிலங்கிட்டு, காருக்கு அடியில் படுக்கவைத்து, அவரின் கழுத்தின் மேல் போலீஸ்காரர் ஒருவர் முழங்காலை வைத்து அழுத்துவது போன்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவில், சுமார் 8 நிமிடங்கள், முழங்காலால் அழுத்தப்பட்டதால், வலி தாங்காமல், ‛என்னால் மூச்சு விட முடியவில்லை, தயவு செய்து என்னை கொல்லாதீர்கள்,' என ஜார்ஜ் கூறினார். ஆனாலும், போலீசார் விடாமல் அழுத்தி அவரை கொன்றனர்.


அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களால், கருப்பினத்தவர்கள் கொல்லப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இதனையடுத்து அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீசாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவித்தாலும், விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.


சமர் மோஸ்லி என்பவர் கடந்த 2015ம் ஆண்டில் நியூயார்க்கில் இருந்து மினியாபொலிஸுக்கு சென்றதிலிருந்து, கறுப்பின மனிதர்களை போலீசார் கொல்வது தொடர்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மிசோரி நகரில் 2014ல் நடந்த கலவரத்தில் நிராயுதபாணியாக நின்ற கறுப்பின இளைஞன் மைக்கேல் பிரவுன், ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் படுகொலை செய்யப்பட்டார். 2015ல் ஜமர் கிளார்க், இரண்டு வெள்ளை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2016ல் செயின்ட் பால் நகரில் பிலாண்டா காஸ்டில் என்பவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டார், கடந்தாண்டு மரியோ பிலிப் பெஞ்சமின் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும், எந்தவொரு வழக்கிலும் அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவம் பல முறை நடந்துள்ளது. இந்த நகரத்தில் கறுப்பின ஆண்களை இலக்குகளாக உணர்கின்றனர். அடுத்த இலக்காக நான் இருப்பேன் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மினியாபொலிஸை சேர்ந்த கிரெக் அக்னியூ என்பவர் கூறுகையில், ஒரு கறுப்பின போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தாலும், வெள்ளை போலீசார் இதை ஒரு நரகமாக பார்க்கிறார்கள். ஜமார் கிளார்க் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ​​வலியும் எதிர்ப்பும் ஏற்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு அது தளர்ந்தது. ஆனால், இந்த ஃபிளாய்ட் சம்பவத்தில் அப்படி இருக்காது, என்றார்.

பிளாய்டின் நண்பரான ரே ரிச்சர்ட்சன் 1990 முதல் மினியாபொலிஸில் வசித்து வருகிறார். ரேடியோ டீஜேவான இவர் கூறுகையில்,பிளாய்ட் வழக்கில் நீதியைக் காண வேண்டும். எங்கள் கோபம் உண்மையானது. கடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் நகரமும் மாநிலத் தலைவர்களும், இது போன்று நடக்காது என வாக்குறுதிகள் அளித்துள்ளனர். ஆனால், பிளாய்டின் மரணம் குறித்த வாக்குறுதிகள் முறையானவை அல்ல. இதனால்தான் பிளாய்ட் வழக்கு இவ்வளவு கோபத்தை உருவாக்கியுள்ளது. இங்குள்ள பெரும்பாலான கறுப்பின மக்களுக்கு இதுதான் கடைசி வைக்கோல், என்றார்.

இப்படியாக அங்குள்ள கறுப்பினத்தவர்கள் மீதான தொடர் தாக்குதலால், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் கறுப்பினத்தவர்கள் கூறினர்.

மூலக்கதை