தலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் மீண்டும் வர வேண்டும் என, சோனியா உட்பட பலர் விரும்புகின்றனர். ராகுலோ, அதற்கு பதில் சொல்லாமல், காலம் தள்ளி வருகிறார். ஆனால், சீனியர் தலைவர்கள் சிலர், 'ராகுல் தலைவராகக் கூடாது;சோனியாவே அந்த பதவியில் நீடிக்க வேண்டும்' என்கின்றனர்.
ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறவர், ஒரு சீனியர் தலைவர். முன்னாள் அமைச்சரான இவர், வழக்கறிஞர் தொழிலில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ராகுலுக்கு எதிரான குழுவின் தலைவர் இவர் தான்.ஊடகங்களில், ராகுலுக்கு எதிராக செய்தி வர வேண்டும் என்பதற்காக, தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களை அழைத்து, 'ராகுல் எதுவும் தெரியாமல், சகட்டு மேனிக்கு அறிக்கைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்; அவர் ஒரு முட்டாள்; அவர் கட்சி தலைவரானால் உருப்பட்ட மாதிரி தான்' என, சொல்லி வருகிறார்.சோனியாவிற்கு நெருக்கமான நான்கு தலைவர்கள், இந்த முன்னாள் அமைச்சருடன் கை கோர்த்துள்ளனர்.
இந்தக் குழுவின் பணத் தேவைகளையும், அந்த முன்னாள் அமைச்சர் கவனித்துக் கொள்கிறார்.இதற்கிடையே, ராகுல் தனக்கு ஆலோசனை வழங்க, ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தனக்கு நெருக்கமான, அதே நேரம், கட்சியில் யார் என்றே தெரியாத சிலரை நியமித்துள்ளார் ராகுல். இவர்கள் எல்லாம், முக்கிய புள்ளி விபரங்களை அலசி ராகுலுக்கு ஆலோசனை தருவராம்.
இந்தக் குழுவில், அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் வயதான தலைவர்களை ராகுல் சேர்க்கவில்லை. இதனால் தான், அந்த கோஷ்டி, ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்கின்றனர், விஷயம்தெரிந்தவர்கள்.