மக்களுக்கு இடைவெளி கட்டாயம்; அரசியல்வாதிகளுக்கு விதிவிலக்கா?
திருவொற்றியூர்; நலத்திட்ட நிகழ்ச்சிகளில், மக்களிடம் இடைவெளி கடைப்பிடிக்க கோரும் அரசியல்வாதிகள், போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் ஆர்வத்தில், விதியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்பதால், தொற்று பரவக் கூடும் என, பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டையில், தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், மக்கள் தனிமனித இடைவெளியுடன் இருக்கையில், அமர வைக்கப்பட்டிருந்தனர்.சரியான இடைவெளியில், நலத்திட்ட உதவிகளை பெற்று, வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டனர். பொதுமக்களுக்கு இடைவெளியை கற்பிப்பதில் ஆர்வம் காட்டிய அரசியல்வாதிகள், தாங்கள் விதியை கடைப்பிடிப்பதில் கோட்டை விட்டனர்.
இதில் பங்கேற்ற, மாவட்டசெயலர் சுதர்சனம், எம்.பி., கலாநிதி ஆகியோருடன் சேர்ந்து, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் ஆர்வத்தில், கட்சியினர் பலரும் சூழ்ந்து நின்றதால், அங்கு தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது.அரை மணி நேரமாக, இதே நிலை நீடித்தது. நலத்திட்ட பொருட்களை வாங்கும் வரை, இடைவெளி கடைப்பிடித்த மக்கள், வெளியேறிய பின், ஆங்காங்கே கூட்டமாக குழுமி நின்றனர்.
போலீசாரும், கண்டுக்கொள்ளவில்லை. வடசென்னையின் பல பகுதிகளில், கட்சிகள் நடத்தும், நலத்திட்ட நிகழ்வுகளில், இடைவெளியை கடைப்பிடிப்பது இல்லை.இதே நிலை நீடித்தால், தொற்று பரவல் தீவிரமாகும். எனவே, காவல் துறை, மாநகராட்சி சுதாரித்து, நலத்திட்ட நிகழ்வுகளில், சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.