'காட்மேன்' நிறுத்தப்படும்!

தினமலர்  தினமலர்
காட்மேன் நிறுத்தப்படும்!

'கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பிராமணர்களையும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட, 'காட்மேன்' என்ற, 'வெப் சீரியல்' தொடர் நிறுத்தப்படும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியிடம், 'ஜி டிவி' நிர்வாகத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை, சுப்பிர மணியசாமி தலைவராக உள்ள, 'விராட் ஹிந்துஸ்தான்' சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சந்திரலேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் மாநில தலைவர், சந்திரலேகா கூறியதாவது:
'ஜி டிவி'யில், 'காட்மேன்' என்ற தொடரை ஒளிபரப்ப இருப்பதாக, விளம்பரம் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துகள் கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.



இது குறித்து, சுப்பிரமணியசாமியிடம் நான் எடுத்துக் கூறினேன். அவர், 'ஜி டிவி'யின் நிர்வாகி, சுபாஷ் சந்திராவிடம் பேசினார். ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும், இந்த தொடரை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.சுபாஷ் சந்திராவும், இந்த தொடரை ஒளிப்பரப்புவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். ஹிந்து தர்மத்தின் பாதுகாவலனாக சுப்பிரமணிய சாமி திகழ்கிறார்; அவருக்கு என்மனமார்ந்த நன்றி.இவ்வாறு, சந்திரலேகா கூறினார்.

'பிராமணர்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுபடுத்தும், 'காட்மேன்' வெப் சீரியலுக்கு தடை விதிக்க வேண்டும்; இதில் தொடர்புடையோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அலட்சியம் காட்டினால், தணிக்கைக்கு உட்படாத வகையில், பிற மத உணர்வுகளை புன்படுத்தும் வகையிலும், தேசத்திற்கு எதிரான கருத்துக்களையும் பரவ, பலரும் பயன்படுத்தி விடுவர்' என, கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளின் எண்ணங்கள் இதோ:

'ஹிந்துக்களை வெறுப்பேற்றும் செயல்'



ராம ரவிகுமார், இந்து தமிழர் கட்சி தலைவர்: ஹிந்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக, குறைந்த நேரம், 'காட்மேன்' வீடியோவை நீக்கிவிட்டு, வசனங்கள் இல்லாது, காட்சிகளை அப்படியே வடிவமைத்து, மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
திட்டமிட்டு ஹிந்துக்களை வெறுப்பேற்றும் செயலை, தொலைக்காட்சி நிர்வாகம் செய்துள்ளது. 'சட்டத்தின் பார்வையில், நாங்கள் யோக்கியர்கள்' என்று சொல்வதுபோல், இவர்கள் செயல்படுகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம், வெப் சீரியல் மற்றும் சின்னத்திரை சம்பந்தமான காட்சிகள் வெளியிட, ஒரு சட்டம் உருவாக்க வேண்டும்.
ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த திட்டமிட்டு செயல்படும் கும்பல்கள் திருந்த வேண்டும். இல்லையேல், ஹிந்து சமுதாயம், இவர்களை திருத்த வேண்டும்.

'குண்டர் சட்டத்தில் கைது?'
தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் பேட்டி: வெப் சீரியல்களுக்கு தணிக்கை கிடையாது என்பதால், தங்களின் இஷ்டத்திற்கு, தகாத வார்த்தைகளை உபயோகிப்பதோடு, அறுவறுக்கும் வகையில் காட்சிகளை எடுத்து வருகின்றனர்.பிராமணர் சமூகம் என்பது மிகவும் மதிக்கத்தக்க சமூகம். அவர்களால், யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. அந்த சமூகத்தினரை அசிங்கமாக சித்தரித்துள்ளனர். நாட்டின் மதிப்பை உயர்த்துபவர்கள் பிராமணர்கள்.
இறை தொண்டு செய்து வரும் இச்சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக கருதி, ஹிந்து மதத்தையே இந்த சீரியல் வாயிலாக இழிவு படுத்த முயல்கின்றனர். எனவே, இந்த டீசர், சீரியலை தடை செய்ய வேண்டும்.சீரியல் தயாரித்தவர்களின், பின்புலத்தை ஆராய வேண்டும். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க வேண்டும். அப்படி செய்தால்தான், ஹிந்து மத கலாச்சாரம் காப்பாற்றப்படும்.

'பிளவு ஏற்படுத்தி முயற்சி'


தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநில தலைவர், முகம்மது சித்திக்: ஹிந்து மதத்தையும், பிராமணர்களையும் களங்கப்படுத்தும், 'காட் மேன்' தொடரை தடை செய்ய வேண்டும்.படக் காட்சிகள், ஜனநாயகத்திற்கு விரோதமானது; இறையான்மையை மீறும் செயல்.இந்த செயலை, ஆரம்ப நிலையில் தடுத்து நிறுத்தா விட்டால், மறைமுகமாகவோ, நேரடியாகவோ, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, மதசார்பற்று வாழ்கிற மக்களை பிளவுப்படுத்த வழி வகுத்து விடும்.இந்த படக்காட்சிகள் முற்றிலும், இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது. மக்கள் ஒற்றுமையையும், சமதர்ம சமுதாயத்தையும் சீர்குலைக்கும்.
மக்களுக்கு நல்வழியை காட்ட வேண்டிய தொடரை எடுக்கலாமே தவிர, மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல, கலைத்துறையினர் முன் வரக்கூடாது.

'விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும்!'



படைப்பு சுதந முஸ்தபா: தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர்: 'ஜி டிவி'யில், சில நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலரில், சாமியார் வேடமிட்ட ஒருவர், பிராமண சமுதாயத்தை களங்கப்படுத்தும் வகையில், வசனங்கள் பேசி நடித்துள்ளார்.
இது, ஹிந்து சமுதாய மக்களை, இழிவுப்படுத்துவதாக உள்ளது; இதை வன்மையாக கண்டிக்கிறேன்.இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டால், சில விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறக்கூடிய வாய்ப்பாகிவிடும். அவரவர் மத கோட்பாடுகள், வழிபாடுகள், அந்தந்த மதத்தினருக்கு உயர்ந்தது.அதை யார் கொச்சைப்படுத்தினாலும், மிகப்பெரிய குற்றம்.
தணிக்கை இல்லை என்பதற்காக, படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும், வலிய புகுத்துவது சரியல்ல. இந்த செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'இன்று ஹிந்து, நாளை...?'



அனைத்து கிறிஸ்துவர்கள் ஐக்கிய சபை செயலர், ஜி.டி.பாஸ்கர்: இன்று ஹிந்து சமுதாயத்தை கொச்சைப்படுத்தியவர்கள், நாளை, கிறிஸ்துவ மதத்தையும், பிற மதங்களையும் கொச்சைப்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மேலும், தேசவிரோத செயலை ஆதரித்தும், நாளை தொடர்கள் எடுக்கும் நிலை ஏற்படும். இந்த மாதிரி தொடர்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது.
இந்தியா மதசார்பற்ற நாடு. இந்திய மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையை காண்பவர்கள். எனவே, இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில், எந்த ஒரு மதத்தினரையும், ஜாதியினரையும், அவதுாறு ஏற்படுத்தும் வகையில், 'டிவி' தொடர் எடுக்க, மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

'ஒட்டுமொத்த சமுதாயமும் போராடும்'



இப்ராஹிம், தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் மாநிலத் தலைவர்: 'காட்மேன்' தொடர் வாயிலாக, பிராமண சமுதாயத்திற்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. பிற சமுதாயம் பாதிப்பு என்றால், போராட்டம் நடத்தி, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும். பிராமணர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்ற தைரியம்.
தமிழக அரசு, உடனடியாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும்.
மீறி ஒளிபரப்பினால், ஒட்டுமொத்த மக்களும், போராட வேண்டி வரும். தொலைக்காட்சி நிறுவனத்தையும் முற்றுகையிடுவோம். இத்தொடரின் பின்னணியில் உள்ள சதியை, அரசு ஆராய வேண்டும். ஒரு சமூகத்தை இழிவுப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

'போலீஸ் கமிஷனரிடம் புகார்'



பிராமணர் சங்கத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன்: 'காட்மேன்' டீசரில் வெளியான பல காட்சிகள், பிராமணர்களை புண்படுத்தும் விதத்தில் உள்ளது. சீரியல் முழுவதும், இதே முறையில் இருக்கும் என்பதை எண்ணும்போது, மிகவும் மனவேதனையாக உள்ளது.
நகைச்சுவை, புதுமை எனும் பெயரில் தமிழ் திரைப்படங்களிலும், 'டிவி' சீரியல்களிலும், பிராமணர் சமூகத்தையும், பழக்க வழக்கத்தையும் கொச்சைப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
எந்த மதத்தையும், ஜாதியினரையும் இழிவாக பேசவோ, காட்டவோ, நம் அரசியல் சாசனத்தில் யாருக்கும் உரிமை இல்லை. ஜாதி கலவரம், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை உண்டாக்கும் விதத்தில் உள்ள, 'காட்மேன்' சீரியலை வெளியிட, தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம். - நமது நிருபர்கள் குழு -

மூலக்கதை