கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிக்க பாபா ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனத்திற்கு அனுமதி : வலுக்கும் எதிர்ப்புகள்!!

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிக்க பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனத்திற்கு அனுமதி : வலுக்கும் எதிர்ப்புகள்!!

இந்தூர்: கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்யும் பொருட்டு சோதனை அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து ஆய்வு செய்ய பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் யோகா குரு, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத மருந்துகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் அளித்து சிகிச்சையளிக்க அனுமதி கோரி, இந்துார் மாவட்ட கலெக்டரிடம், பதஞ்சலி நிறுவனம் மனு கொடுத்தது.. இதையடுத்து, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க, பதஞ்சலி நிறுவனத்துக்கு இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக ஆட்சியர் அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நாட்டு மக்களை கினியா பன்றிகளை போல் நடத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். எந்த மருந்தாக இருந்தாலும் இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற்றே மனிதர்களுக்கு சோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய பிரதேச அரசை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது அது போல் பதஞ்சலி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் தரவில்லை என்றது. இதையடுத்து இந்தூர் ஆட்சியரிடம் பேசினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் திக்விஜய சிங்.

மூலக்கதை