ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு? 5.0 முடக்க தளர்வுகளை மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு? 5.0 முடக்க தளர்வுகளை மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம்

புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 5.0 கட்டமாக ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக மத்திய அரசு இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தளர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், தேசிய ஊரடங்கு இதோடு விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக தொடங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான தளர்வுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு முன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன்ஆலோசனை நடத்தினார். இம்முறை முதல் முறையாக, அமித்ஷா அந்த ஆலோசனையை நடத்தியுள்ளார். இதை  தொடர்ந்து அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசித்தார். இக்கூட்டத்தில் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசு இன்று 5.0 முடக்கம் பற்றி முக்கிய முடிவு எடுக்க உள்ளது. இதுபற்றி அதி காரிகள்கூறுகையில், ‘‘ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் விவகாரத்தில் மத்திய அரசு பங்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூழலை பொறுத்து அந்தந்த மாநில அரசுகளே முக்கிய பல முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், சர்வதேச விமான போக்குவரத்து, மால்கள், அரசியல் கூட்டங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவைகளுக்கான தடை வழக்கம் போல் நீடிக்கும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது, மாஸ்க் கட்டாயம் அணிதல் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஜூன் 1 முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு விமானம், ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளது,’’ என்றனர். கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கும், பின் 17 நாட்களுக்கும் அடுத்து இருமுறை தலா 14 நாட்களுக்கும் என 4 கட்டமாக 68 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.30 மாநகராட்சிக்கு தளர்வு கிடையாதுகொரோனா வைரஸ் பாதிப்பில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 30 மாநகராட்சி பகுதிகளில் உள்ளனர். இந்த 30 மாநகராட்சிகளும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உபி, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ளடங்கி உள்ளன. குறிப்பாக, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னையில் கொரோனா தொற்று பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. எனவே பாதிப்பு அதிகமுள்ள இந்த 30 மாநகராட்சிகளில் எந்தவித தளர்வும் வழங்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவும் மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மூலக்கதை