இன்று 'எப்.எஸ்.டி.சி.' கூட்டம்: மத்திய நிதி அமைச்சர் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
இன்று எப்.எஸ்.டி.சி. கூட்டம்: மத்திய நிதி அமைச்சர் பங்கேற்பு

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் எப்.எஸ்.டி.சி. எனப்படும் நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனாவால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை சமாளித்து நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சிக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது.



இக்குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உட்பட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம், ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் நிதித் துறை அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க கடந்த மூன்று மாதங்களில் 8.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது. இதைச் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை