கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 4,337 ஆனது
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6,387 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதித்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,387 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64 ஆயிரத்து 425 பேர் குணமடைந்து உள்ளனர். 83 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதித்த 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 170 பேரில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 27 பேரும், டெல்லியில் 12 பேர், தமிழகத்தில் 9 பேர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 பேர், ராஜஸ்தானில் 3 பேரும் இறந்துள்ளனர். ஆந்திர பிரதேசம், சண்டிகர், அரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா, தெலங்கானா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.