காலில் வளையம், மர்ம எண்களுடன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த புறா!! ரகசிய தகவல்களை அனுப்பவா?

தினகரன்  தினகரன்
காலில் வளையம், மர்ம எண்களுடன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த புறா!! ரகசிய தகவல்களை அனுப்பவா?

இஸ்லாமாபாத் : காலில் வளையம் அமைத்து அதில் மர்ம எண்கள் குறியிடப்பட்ட புறா ஒன்று பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. அதை பிடித்து மக்கள் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லைகளை ரகசிகயமாக கண்காணிக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதாகவும், அதற்காக கேமரா பொருத்திய டுரோன்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களது இந்த முயற்சியை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டம் ஷிலயரி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறா ஒன்று வட்டமிட்டுக்கொண்டு இருந்துள்ளது. அந்த புறாவின் இறக்கையில் இளஞ்சிவப்பு நிற சாயம் பூசப்பட்டிடுந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அந்த புறாவை பிடித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த புறாவின் காலில் சில வளையங்கள் இருந்ததும், அதில் சில எண்கள் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த புறா பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும், காலில் பொருத்தப்பட்டுள்ள வளையங்களில் உள்ள எண்கள் எதேனும் ரகசிய தகவல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், இந்த புறாவை பாகிஸ்தான் இந்திய எல்லைகளை உளவு பார்க்க பயன்படுத்துகிறதோ? என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது.இதையடுத்து, பிடிபட்ட புறா தொடர்பாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து கத்துவா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட புறாவை கைப்பற்றினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், புறா எங்கிருந்து வந்தது, அதன் காலில் பொருத்தப்பட்ட வளையங்கள் மற்றும் அதில் எழுதப்பட்டிருந்த எண்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கத்துவா மாவட்ட போலீஸ் அதிகாரி ஷைலேந்திர குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை