'பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற முடியாது'

தினமலர்  தினமலர்
பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற முடியாது

நியூயார்க்: ''பெண்கள் அதிகாரம் பெற்று உயர்வடையாமல், எந்த சமுகமும் முன்னேற்றம் காண முடியாது,'' என, ஐ.நா., பாதுகாப்பு படையின், இந்திய பெண் கமாண்டர் ப்ரீத்தி ஷர்மா கூறினார்.

ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படையில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இந்திய பெண் கமாண்டர், ப்ரீத்தி ஷர்மா கூறினார். இது தொடர்பாக, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:

ஐ.நா.வின் அமைதிப்படையில், நான்கு சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில், 50 சதவீதமுள்ள பெண்கள் மற்றும் சிறுமியர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி பிரச்னைகளுக்கு தீர்வு காண, அமைதிப் படையில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம்.


'ஒரு பறவை, ஒரு சிறகுடன் பறக்க முடியாது' என்பது போல், பெண்கள் அதிகாரம் பெற்று உயர்வடையாவிடில், எந்த சமூகமும் முன்னேற முடியாது. இங்கு, இந்தியாவில் இருந்து வந்த, 22 பேர் செயல்படுகிறோம். எங்களைப் போலவே, இந்தியாவில் இருந்து, 5,400க்கும் மேற்பட்டோர், அபேய், சைப்ரஸ், லெபனான், மத்திய கிழக்கு நாடுகள், சூடான் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை