சீன வங்கிகளிடம் வாங்கிய ரூ.5,400 கோடி கடனை 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் : அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!!

தினகரன்  தினகரன்
சீன வங்கிகளிடம் வாங்கிய ரூ.5,400 கோடி கடனை 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் : அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!!

லண்டன் : சீன நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் 2012ம் ஆண்டு அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை ரூ. 7000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவன செய்தி  தொடர்பாளர், கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு அனில் அம்பானியை கட்டுப்படுத்தாது என்றும் ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை