கொரோனா முடக்கத்தால் அடல் ஓய்வூதிய திட்டத்தில் பணம் எடுக்க விரைவில் அனுமதி
புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, அடல் ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள், தங்கள் ஓய்வூதிய நிதியிலிருந்து ஒரு பகுதியை எடுப்பதற்கு அனுமதிப்பது பற்றி அரசு திட்டமிட்டு வருகிறது. அடல் ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) நடத்தி வருகிறது. அடல் ஓய்வூதிய திட்டத்தில் 2.11 கோடி சந்தாதாரர்கள் மாத, மாதம் பணம் செலுத்தி வருகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையில் இந்த நிதியிலிருந்து பணம் எடுக்க ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. தற்போது, கொரோனா முடக்கம் காரணமாக தொழிலாளர்கள் பலர் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அடல் ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்திய ஓய்வூதிய நிதியிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொள்ள அனுமதிப்பது பற்றி அரசு திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் பிஎப்ஆர்டிஏ தலைவர் சுப்ராதிம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.