நெருக்கடியான காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன: மருந்து ஏற்றுமதிக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்புக்கு மோடி பதில்

தினகரன்  தினகரன்
நெருக்கடியான காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன: மருந்து ஏற்றுமதிக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்புக்கு மோடி பதில்

டெல்லி : நெருக்கடியான காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ஒன்றாக இணைந்து கொரோனாவை வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மருந்தை அமெரிக்காவுக்கு கொடுப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று  மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு வழங்கும் முடிவிற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அசாதாரணமான சூழ்நிலைகளில், நண்பர்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் டிரம்ப் ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, இதுபோன்ற காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன என அதிபர் டிரம்ப் கூறுவதில் முழுமையாக உடன்படுவதாக பதிவிட்டுள்ளார்.இந்திய-அமெரிக்க நட்புறவு முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது என்றும், கொரோனாவுக்கு எதிரான மனிதகுலம் நடத்தும் போரில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும், நாம் ஒன்றாக இணைந்து இதில் வெற்றிபெறுவோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மூலக்கதை