ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்கவும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்கவும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

டெல்லி: வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு பொருளாதார ரீதியில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒரு பக்கம் மருத்துவ ரீதியிலான பிரச்னையை சந்தித்து வரும் அதேவேளையில் கடுமையான பொருளாதாரப் பிரச்னையையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மாதம் 26-ஆம் தேதி ரூ. 1.70 லட்சம் கோடி சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல வருமான வரியில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை 14 லட்சம் வரி செலுத்துவோருக்கு பயனளிக்கும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு தொழில் நடத்துவோர் உட்பட தொழில்புரியும் சுமார் 1 லட்சம் பேர் பயனடையும் வகையில் அனைத்து ஜிஎஸ்டி மற்றும் தொடர்புடைய வரி பிடித்தமும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை