ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில் 50 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிப்பு: முதல்வர் ஜெகன்மோகனிடம் ஒப்படைப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில் 50 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிப்பு: முதல்வர் ஜெகன்மோகனிடம் ஒப்படைப்பு

திருமலை: ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில், 50 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டு, முதல்வர் ஜெகன்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பரிசோதனை  முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் கருவியை தயார் செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் கொரோனா பரிசோதனை கருவி  தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகனிடம் தொழில்துறை அமைச்சர் கவுதம், நேற்று தனியார் நிறுவனம் சார்பில் தயாரித்த கொரோனா பரிசோதனை கருவியை வழங்கி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில் இந்த கருவியை பயன்படுத்தி, ஒவ்வொரு 50 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரு கருவியில் ஒரு நாளுக்கு 20 முடிவுகள் வரை தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆயிரம் கருவிகள் மாநில சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரம் மருத்துவ பரிசோதனை கருவிகள் மாநில சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கவுதம் தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினிகள், முதல்வர் ஜெகன்மோகன் மூலம் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டது. அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் டிஜிபி கவுதம் சவாங், முதன்மை செயலாளர் நீலம் சஹானி, மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆளநானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

மூலக்கதை