எல்லா தொழிலிலும் கை வைக்கிறது கொரோனா 25 சதவீத கடைகள் மூடப்படுமா?: அரசு உதவ வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
எல்லா தொழிலிலும் கை வைக்கிறது கொரோனா 25 சதவீத கடைகள் மூடப்படுமா?: அரசு உதவ வலியுறுத்தல்

புதுடெல்லி: அரசு உதவி செய்யாவிட்டால் 25 சதவீத சில்லறை விற்பனையாளர்கள் தொழிலை விட வேண்டிய நிலை உருவாகும். அதோடு, இத்துறையில் 20 சதவீத தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மளிகை போன்ற உணவு சார்ந்த சில்லறை விற்பனையாளர்கள் தவிர மற்றவர்கள், தொழில் நடத்த முடியவில்லை. இதுகுறித்து இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: உணவு சாராத பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள், ஊரடங்கு காரணமாக எந்த ஒரு வருவாயும் ஈட்ட முடியாத நிலையில் உள்ளனர். அரசு உதவி செய்யாவிட்டால் இவர்களின் நிலை மிகவும் மோசமாகிவிடும். இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள சில்லறை விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள 20 சதவீத ஊழியர்களை நீக்கினால்தான் நஷ்டத்தை சமாளிக்க முடியும் என கூறியுள்ளனர். சிறிய சில்லறை வர்த்தகர்கள், ஊரடங்கு முடிந்த பிறகு 30 சதவீதம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டி வரலாம் என கூறியுள்ளனர்.  சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் 768 சங்க உறுப்பினர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 51 சதவீதம் பேர், ஊரடங்கு முடிவுக்கு வந்து 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகுதான் தொழிலில் மீளமுடியும் எனவும், 24 சதவீதம் பேர், 3 முதல் 6 மாதத்தில் மீண்டு வரலாம் எனவும் கருத்து கூறியுள்ளனர். 18 சதவீத உறுப்பினர்கள் மளிகை போன்ற உணவு சார்ந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள்.  மேலும், 80 சதவீத உறுப்பினர்கள் ஆகஸ்ட் மாதம் வரை லாபம் ஈட்ட வழியில்லை என கூறியுள்ளனர். வரும் 6 மாதங்களில், முந்தைய ஆண்டு வருவாயில் 40 சதவீதம் மட்டுமே ஈட்ட முடியும் என்று எதிர்பார்ப்பதாக உணவு சாராத சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய மால்களின் உரிமையாளர்கள் சிலர் வாடகையில் தள்ளுபடி தர முன்வந்துள்ளனர். இருப்பினும், பணப்புழக்கம் 2 முதல் 3 காலாண்டு வரை நீடிக்கலாம் என்ற கவலை வர்த்தகர்களிடம் உள்ளது. ஊழியர்கள் சம்பளம் மற்றும் சரக்குகளை இருப்பு வைப்பதில் 30 சதவீதம். வாடகையாக 35 முதல் 40 சதவீதம் போய்விடுகிறது.  எனவே, குறைந்த பட்ச மின் கட்டணம், ஜிஎஸ்டி சலுகை, சொத்து வரி செலுத்துவதில் சில மாதங்களுக்கு விலக்கு போன்ற சலுகைகளை அரசு அளித்தால் ஓரளவு சமாளிக்கலாம். அரசு உதவாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.* சில்லறை விற்பனையில் 4 கோடி முதல் 5 கோடி ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 20 சதவீதம் பேரின் வேலைக்கு ஆபத்து காத்திருக்கிறது.* இழப்பில் இருந்து மீள 6 மாதம் முதல் ஒரு ஓராண்டு ஆகலாம் எனவும், ஆகஸ்ட் வரை லாபம் பார்க்க வழியே இல்லை எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.*  35 முதல் 40 சதவீத வருவாய் கடை வாடகைக்கே போய்விடுகிறது. வாடகை தள்ளுபடி, வரி, மின்கட்டணங்களில் சலுகை அறிவித்தால்தான் ஓரளவு மீள முடியும்.

மூலக்கதை