கொரோனா வைரஸ் உருவத்தில் கார் வடிவமைப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த ஹைதராபாத்தில் நூதன முயற்சி

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் உருவத்தில் கார் வடிவமைப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த ஹைதராபாத்தில் நூதன முயற்சி

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட குட்டி ரகக் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். உடலின் மேல்பகுதி முழுவதும் முட்கள் போன்று அமைக்கப்பட்டு  தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம், முழுவதும் கார் மாதிரியான செயல்திறனை கொண்டது என அதன் வடிவமைப்பாளரான சுதாகர் தெரிவித்துள்ளார்.மேலும், உரிய அனுமதி பெற்று இந்த காரை கொண்டு ஹைதராபாத் முழுவதும், மக்களை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார்.இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் ஊழியர்களுக்கு பத்து நாட்கள் செலவாகியுள்ளது. இந்த மியூசியத்தில் இதுபோன்று தீம்டு கார்கள், பைக் ஆகியவற்றை வடிவமைப்பது வழக்கம்.முன்னதாக எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வின் போது காண்டம் உருவ வாகனத்தை வடிவமைத்துள்ளனர். அதேபோல, சிகரெட்க்கு எதிரான விழிப்புணர்வு நடத்திய போது சிகரெட் வடிவில் பைக் மற்றும் ஹெல்மெட் கொண்ட கார் ஆகியவற்றை இவர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை