கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் பிறர் மீது எச்சில் துப்பினால் அவர் மீது கொலைமுயற்சி வழக்கு...இமாச்சல பிரதேச அரசு அதிரடி
சிம்லா: கொரோனா பாதித்த நபர் மற்றொருவர் மீது துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது. துப்பியதால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,076-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள். கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 291 பேர் குணமடைந்த நிலையில்; 3,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் பிறர் மீது எச்சில் துப்பினால் அது கொலை முயற்சியாகக் கருதப்படும் என இமாச்சலப் பிரதேசக் காவல்துறைத் தலைமை இயக்குநர் மார்டி தெரிவித்துள்ளார். சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் பிறர் மீது எச்சில் துப்பினால் அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்யப்படும் எனத் தெரிவித்தார். எச்சில் துப்பப்பட்டவர் உயிரிழந்தால் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பும் முயற்சியைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.