கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது : ஒரே நாளில் 83,000 பேருக்கு தொற்று; வளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும் என எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது : ஒரே நாளில் 83,000 பேருக்கு தொற்று; வளர்ந்த நாடுகள் அழிவை சந்திக்கும் என எச்சரிக்கை

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 39,391 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,77,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 119,827 பேரும், ஸ்பெயினில் 119,199 பேரும்,ஜெர்மனியில் 91,159 பேரும்,பிரான்சில் 82,165 பேரும், சீனாவில் 81,639 பேரும்,ஈரானில் 53,183 பேரும்,ஐரோப்பியாவில் 38,168 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மிக மோசமான சூழல் உருவாகும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. இதே போல், கொரோனா வைரசால் உலக பொருளாதார ரூ.310 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய வளர்ந்த நாடுகள் கடுமையான அழிவை சந்திக்கும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்துள்ளது. 

மூலக்கதை