கடந்த இரு மாதங்களாக சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்

தினகரன்  தினகரன்
கடந்த இரு மாதங்களாக சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்

உத்தர பிரதேசம்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும், கொரோனா பாதிப்பு உள்ளது. உத்தர பிரதேசத்தில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மதியம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூறும் போது,” எங்களுக்குக் கடந்த இரு மாதங்களாக சம்பளம் நிலுவையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் முன்வரிசையில் களத்தில் இருக்கிறோம். ஆனாலும், எங்களுக்கு கிருமி நாசினிகள், உரிய கையுறைகள் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் வழங்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இன்று பிற்பகலுக்குப் பிறகு நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம். மருத்துவர்களுக்கு வழங்குவது போலவே எங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சம்பள விவகாரங்களை  உங்கள் நிறுவனத்துடனேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறும் இந்த விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது எனவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்து விட்டது” என்றனர்.  உத்தர பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் கீழ், 108,102 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்களை இயக்கி வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வந்த உத்தர பிரதேசத்திற்கு வந்த நபர்களால், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை