அக்கறை என்பது துளியும் இல்லை! திருவிழா போல திரண்ட பெரும் கூட்டம்:டூசமூக இடைவெளியின்றி அலைமோதல்

தினமலர்  தினமலர்
அக்கறை என்பது துளியும் இல்லை! திருவிழா போல திரண்ட பெரும் கூட்டம்:டூசமூக இடைவெளியின்றி அலைமோதல்

ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பூரில், இறைச்சி, மீன் வாங்கவும் மற்றும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கவும் மக்கள் பெருங்கூட்டமாக கூடியதை பார்த்து, அதிகாரிகளும், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று நடந்து கொண்டால், கொரோனா தொற்றை ஒழிப்பது என்பது இயலாத காரியமாக மாறிவிடும்.
உலக மக்கள் உயிரை கையில் பிடித்தபடி, கொரோனாவுக்கு இறையாக்கூடாதென, ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஒட்டுமொத்த சுகாதாரத்துறை வல்லுனர்களும், நோயை கட்டுப்படுத்தவும், புதிய மருந்து கண்டுபிடிக்கவும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு குடும்பமும், கொரோனா வராமல் தடுக்க வேண்டுமென, ஊரடங்கு உத்தரவை ஏற்று, வீட்டிக்குள் அமைதி காத்தன. ஞாயிற்றுகிழமை என்பதால், அபாயம் அனைத்தையும் மறந்து, அசைவ பிரியர்களின் அணிவகுப்பு, அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விடிய துவங்கியதும், இறைச்சிக்கடைகள், மீன் கடைகளின் முன், மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. ஞாயிறு விடுமுறையை அனுபவிக்கும் ஆர்வத்துடன், 21 நாட்களும் விடுமுறை தான் என்பதை மறந்து, கும்பலாக சேர்ந்துவிட்டனர்.திருப்பூர், தென்னம்பாளையம், பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, மங்கலம் உட்பட நகர் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில், எங்கு பார்த்தாலும், நெருக்கியடித்தது மக்கள் கூட்டம்.
'ஒரு மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டு, ஒவ்வொருவரும் தனித்தனியே நின்று பொருள் வாங்க வேண்டும்,' என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை, வியாபாரிகளும், பொதுமக்களும் கடைப்பிடிக்கவில்லை.
ஒவ்வொரு கடையிலும், 50 முதல், 100 பேர் வரை காத்திருந்தனர். தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், ஒரு கட்டத்தில் நெரிசல் அதிகரித்தது. அனைவருக்கும் மீன் கிடைக்காது என்ற பேச்சு எழுந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன் மார்க்கெட்டில் திரண்டிருந்தும், போலீசாருக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.
கொரோனாவுக்குவரவேற்பா?
மங்கலம் நால்ரோடு பகுதி, நேற்று காலை, 6:00 முதல், 10:00 மணி வரை, தேர்த்திருவிழா நடக்கும் இடம்போல் மாறியிருந்தது. மளிகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இறைச்சி கடைகளின் முன், வரைப்பட்ட வெள்ளை கட்டங்கள் காணாமல் போயிருந்தது.இறைச்சி வாங்கும் ஆர்வத்தில், அனைத்தையும் மறந்து, ஒருவருக்கொருவர் நெருக்கமாக, வரிசையில் நின்றிருந்தனர். போலீசாரும், வருவாய்த்துறையும், சுகாதாரத்துறை பணியாளர்களும் பலமுறை கூறியும், ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்காமல், நெருக்கமாக நின்றனர்.மங்கலத்தில், மாட்டு இறைச்சி, மீன் கடைகள் மக்களால் சூழப்பட்டிருந்தன.கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் கூட, மக்கள் சமூக இடைவெளி காட்டாமல் நெருக்கமாக நின்று, வாங்கி சென்றனர். மக்கள் கூட்டத்தை கண்ட போலீசார், அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.கொரோனாவை விரட்ட, ஐந்து நாட்கள் வீட்டுக்குள் அடைகாத்ததை வீணாக்கிவிட்டதாக, தன்னார்வலர்களும், அதிகாரிகளும், மக்களின் இந்த செயலால் வருத்தம் அடைந்துள்ளனர்.
கொள்ளை லாபம்பார்க்கும் வியாபாரிகள்
பொதுமக்கள் கூறுகையில்,' கொரோனா வைரஸ் தடுப்புக்காக, ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. கோழி இறைச்சி ஆகாது என்று வதந்தி பரவியதால், ஆட்டு இறைச்சி, கிலோ 550 ரூபாய்க்கு இருந்தது, 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், கிலோ 600க்கு விற்கப்பட்ட நாட்டுக்கோழி, இன்று (நேற்று), 800 ரூபாய். நெருக்கடியான நேரத்தில், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, ஊரடங்கு காலம் வரை, இறைச்சி கடை திறப்பதை முறைப்படுத்த வேண்டும்,' என்றனர்.
'நடவடிக்கை எடுக்கப்படும்'
இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:யாரும் எதிர்பாராத வகையில், மீன் கடை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தென்னம்பாளையம் மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக கூடிவிட்டது. உடனடியாக, இறைச்சி மற்றும் மீன்கடை உரிமையாளர்களை அழைத்துப்பேசி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும் என்பது அரசின் முடிவு; உரிய பாதுகாப்பு வசதி செய்யப்படும். பெரிய மைதானம் அல்லது பஸ் ஸ்டாண்ட் போன்ற விசாலமான இடத்தில், தற்காலிகமாக இறைச்சிக்கடை நடத்த, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல், இப்படி கூட்டம் சேர போலீசார் அனுமதிக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
கட்டுப்பாடு மிக அவசியம்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது:சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றியும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் கடைகளில் மக்கள் திரண்ட காட்சி வேதனையளிக்கிறது. கடந்த சில நாட்களை விட, திருப்பூரில் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. அவிநாசி ரோடு மீன் கடைகளில், எவ்விதமான சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. வியாபாரிகள் மற்றும் மக்களின் இந்த செயலை பார்க்கையில், கொரோனாவின் வீரியம் புரியவில்லை என்பதையே உணர்த்துகிறது.ஒவ்வொருவரும், தனி மனித ஒழுக்கத்தோடு நடந்தால் மட்டுமே இதை விரட்டி அடிக்க முடியும். அரசு நிர்வாகம் என்னதான் போராடினாலும், கொரோனா மாபெரும் பிரச்னையாக மாறிவிடும் என்பதே உண்மை.

- நமது நிருபர்கள் குழு -

மூலக்கதை