ரூ.1,000 பாஸ் கால அளவு நீட்டிப்பு? மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

தினமலர்  தினமலர்
ரூ.1,000 பாஸ் கால அளவு நீட்டிப்பு? மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

சென்னை : 'சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பயணியருக்கு வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் பஸ் பாஸ்களின் கால அளவு நீட்டிக்க ஆலோசித்து வருகிறோம்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், மாதம் முழுவதும் பயணம் செய்ய வசதியாக, பயணியருக்கு, 1,000 ரூபாய்க்கு பாஸ் வழங்கப்படுகிறது.இந்த பஸ் பாஸ்கள், ஒவ்வொரு மாதமும், 16ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம் 15ம் தேதி வரை பயணிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இதனை, 14ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த மாதம், 23ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது, அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த மாதம், 16ம் தேதிக்குப் பின் பயணிக்கும் வகையில் வழங்கப்படும், புதிய பஸ் பாஸ்களை பெற முடியாத நிலை உள்ளதால், செய்வதறியாமல், பயணியர் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை உபயோகப்படுத்தாத நாட்களுக்கான கட்டணத்தை, ஊரடங்கு உத்தரவுக்குப் பின் பயன்படுத்துவது குறித்தும், புதிய பஸ் பாஸ் பெறுவதற்கான தேதியை நீட்டிப்பது குறித்தும், ஆலோசித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்ததும், இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை