கொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக நடந்தே செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கம்!!

தினகரன்  தினகரன்
கொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக நடந்தே செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கம்!!

டெல்லி : டெல்லியில் தவித்துக் கொண்டு இருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை அழைத்துச்செல்ல 1000 பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது.இதையடுத்து மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில் டெல்லி வேலை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் மாநிலத்துக்கு செல்ல போக்குவரத்து இன்றி தவித்து வந்தனர். டெல்லியில் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்கூடங்கள், ஓட்டல்களில் வேலை ஆகியவற்றை நம்பி, கிராமங்களிலிருந்து மாநகருக்கு வாழ்வாதாரத்தை தேடி புலம் பெயர்ந்த மக்கள், சொந்த ஊருக்கு பல நூறு மைல்கள் நடந்தே சென்றுகொண்டிருக்கின்றனர்.  இதில் குழந்தைகளும் அடக்கம். சிலர் ரயில் பாதைகளின் வழியே  நடந்து அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ராஜஸ்தான்,  பீகார் ஆகிய இடங்களை அடைய அபாய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் பால் வாகனங்களில் உள்ள டேங்கர்களில் பதுங்கி, அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். டெல்லி, உத்தரபிரதேச எல்லையில் உள்ள காஜீப்பூரில் கூட்டம், கூட்டமாய் மக்கள், நடந்தே செல்வதால், சமூக விலகல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.மொத்தமாக சென்றால் கொரோனா தொற்று பரவும் என்பதால் அவர்களை உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் டெல்லி முதல்வரை தொடர்புகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை