சச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு | மார்ச் 27, 2020

தினமலர்  தினமலர்
சச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு | மார்ச் 27, 2020

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் சச்சின், ஹிமா தாஸ் உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.

‘கொரோனா’ வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்குகிறது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், ஐ.பி.எல்., உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு விளையாட்டு அமைப்புகள் மற்றும் நட்சத்திரங்கள் நிதியுதவி அளிக்கின்றனர். பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி (ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி), முன்னாள் இந்திய கேப்டன் தோனி (ரூ. ஒரு லட்சம்), இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான், யூசுப் பதான் (4000 ‘மாஸ்க்’), இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து (ரூ. 10 லட்சம்), இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா (6 மாத சம்பளம்),  அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ. 8 கோடி), போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 8 கோடி) உள்ளிட்டோர் நிவாரண நிதி அளித்துள்ளனர்.

 

சச்சின் ரூ. 5௦ லட்சம்

இப்பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் இணைந்துள்ளார். இவர், பிரதமர் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்காக தலா 25 லட்சம் வழங்கினார். இதுகுறித்து ‘டுவிட்டரில்’ சச்சின் வெளியிட்ட செய்தியில், ‘‘கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பை செலுத்துவது சமுதாயக் கடமை. நாம் அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது. ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி விலகி இருந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். மனதால் ஒருங்கிணைந்து போராடினால் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வெற்றி பெற முடியும்,’’ என, தெரிவித்திருந்தார்.

 

ரத்தன் சுக்லா

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமி ரத்தன் சுக்லா, மேற்கு வங்க மாநில விளையாட்டு அமைச்சராக உள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதியுதவியாக இவர், தனது 3 மாத சட்டபேரவை உறுப்பினர் சம்பளம் மற்றும் 3 மாத பி.சி.சி.ஐ., ‘பென்சன்’ பணத்தை வழங்குகிறார்.

 

அலீம் தர்

ஐ.சி.சி., அம்பயரான பாகிஸ்தானின் அலீம் தர், லாகூரில் உணவு விடுதி ஒன்று நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாகிஸ்தானிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையின்றி தவிப்பவர்களுக்கு அலீம் தர், தனது ஓட்டலில் இலவசமாக உணவு வழங்குகிறார்.

 

ஹிமா தாஸ் உதவி

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணியாற்றுகிறார். கடந்த 2018ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் (20 வயது, 400 மீ., ஓட்டம்), ஆசிய விளையாட்டில் (பெண்கள் 4*400 மீ., மற்றும் கலப்பு 4*400 மீ., ஓட்டம்) தங்கம் வென்ற இவர், தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக அசாம் மாநில அரசிடம் வழங்கினார்.

இதுகுறித்து ஹிமா தாஸ் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘பாதிக்கப்பட்டோருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யும் நேரம் இது.  எனது ஒரு மாத சம்பளத்தை அசாம் மாநில அரசிடம் வழங்குகிறேன். ,’’ என, தெரிவித்திருந்தார்.

 

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 32. உலகின் ‘நம்பர்–1’ வீரரான இவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக ரூ. 8.3 கோடி வழங்குகிறார். இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘‘இந்த நிவாரண நிதி, உயிர் காக்கும் சுவாசக் கருவிகள் மற்றும் பிற சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதால் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன். தந்தையான பின், இப்படி நீண்ட நேரம் குடும்பத்தினருடன் இருப்பது இதுதான் முதல்முறை. சீனாவிடம் இருந்து மருத்துவ உதவிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இதற்காக சீனாவுக்கு நன்றி,’’ என்றார்.

மூலக்கதை