கொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
கொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு

வாஷிங்டன்: கொரோனாவை தடுக்க இந்தியாவுக்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி,  அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இதற்கிடையே, உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் நேற்று 24 ,341 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்  மூலம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,352 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், 64 நாடுகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடியை அமெரிக்க அரசு ஒதக்கீடு செய்துள்ளது. இதில், இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வரும், அதிபர் டிரம்ப், உலகின் பணக்கார, மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனால், 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். லட்சக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போதே சுமார் 30 லட்சம் பேர் வேலை இழந்து, வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையை சமாளிக்க 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க ஜி20 கூட்டமைப்பு நாடுகள் உறுதியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை