கொரோனா வராமல் காப்பது எப்படி என உலகிற்கு வழிகாட்டுகிறது ரஷ்யா: வந்த பின்பு எப்படி போராடி வெல்வது என்று வழிகாட்டுகிறது ஜெர்மனி

தினகரன்  தினகரன்
கொரோனா வராமல் காப்பது எப்படி என உலகிற்கு வழிகாட்டுகிறது ரஷ்யா: வந்த பின்பு எப்படி போராடி வெல்வது என்று வழிகாட்டுகிறது ஜெர்மனி

பெர்லின்: கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்துவதில் ஜெர்மனி உலகிற்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜெர்மனியும் தொடக்கத்தில் சற்று அலட்சியமாக தான் இருந்து வந்தது. ஆனால் கொரோனா பரவளின் வேகம் அதிகமான போது ஜெர்மனி யாரும் எதிர்பாராத விதமாக கொரோனாவை எதிர்த்து தாக்குப்பிடிக்க தொடங்கியது. உதாரணமாக கடந்த வாரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 5-வது இடத்தை பெற்றாலும், கொரோனா உயிரிழப்புகளில் ஜெர்மனி 10-வது இடத்தில் தான் இருந்தது. இதிலும் ஜெர்மனியில் கொரோனா பரவல் முதல்முதலாக கண்டறியப்பட்ட பவேரியா மாகாணத்தை தவிர வேறு எங்கும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் ஜெர்மனியை ஆச்சரியத்துடன் பார்க்க தொடங்கியுள்ளனர். கொரோனா வராமல் காப்பது எப்படி என்பது ரஷ்யா உலகிற்கு வழிகாட்டுகிறது என்றால் வந்த பின்பும் அதற்கு பின்னர் எப்படி போராடி வெல்வது என்று ஜெர்மனி உலகிற்கு வழிகாட்டுகிறது. ஊரடங்கு போடப்பட்ட நாடுகளில் கூட 5 பேர் கூட ஓரிடத்தில் கூட முடியும். ஆனால் ஜெர்மனியில் 2 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற அரசின் உத்தரவை மக்கள் அப்படியே பின்பற்றுகின்றனர். பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவையும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இந்த ஒழுங்கு ஜெர்மனியில் கொரோனாவின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 25% குடிமக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கைகையில் சீனாவின் தொகையில் பாதியை தோட்ட போதே இறப்பு எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது. ஆனால் ஜெர்மனி ஐரோப்பா கண்டத்தில் அதிக சதவீத இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வயது 63-ஆக உள்ள போது ஜெர்மனியில் அது 47 -ஆக உள்ளது. இந்த வயது வித்தியாசம் தான் கொரோனாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்கும் ஆற்றலை ஜெர்மனிக்கு கொடுத்துள்ளது. உலகிலேயே தனிநபர் சுகாதாரத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடாக ஜெர்மனி உள்ளது. ஜெர்மனி அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆண்டுக்கு 5,182 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம்) சுகாதாரத்திற்க்காக ஒதுக்குகிறது. இதனால் ஜெர்மானியர்கள் சுகாதாரம் மிக்கவர்களாகவும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் உள்ளனர். மற்ற எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் ஜெர்மனியில் மருத்துவ உட்கட்டமைப்புகள் பலமாக உள்ளன. கொரோனா பரவ தொடங்கிய ஜனவரி மாதமே அங்கு 25 ஆயிரம் மருத்துவ அறைகள் தனிமைப்படுத்துதலுக்காக தயார் செய்யப்பட்டன. மருத்துவ சோதனை நிலையங்களும் ஜெர்மனியில் அதிகமாக உள்ளன. பிற எந்த ஐரோப்பிய நாடும் ஒரு லட்சம் மக்களை கூட கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாத நிலையில் ஜெர்மனியில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சாத்தியமானது இதனால் தான். இப்போது தினமும் 12 ஆயிரம் பேருக்கு ஜெர்மனியில் கொரோனா பரிசோதனைகள் நடக்கின்றன. சாலையில் காரில் செல்லும் நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் காரில் வைத்தே 5 நிமிடத்தில் சோதனை செய்து சோதனையின் முடிவை 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கும் ஒரே நாடாக ஜெர்மனி உள்ளது. மேலும் கொரோனா தொற்று அல்லாமல் சாதாரண fever, flu fever ஆகியவற்றிக்காக மருத்துவர்களை நாடும் மக்களின் விவரங்கள் கூட ஜெர்மனி சுகாதாரத்துறையிடம் உள்ளன. இதை கொண்டு அவர்கள் கொரோனா பரவாமல் இருக்க போராடுகிறார்கள். உலக நாடுகள் பட்ஜெட்டில் பெரும் பகுதியை ராணுவத்திற்கே ஒதுக்கி வரும் நிலையில் ராணுவம் போலவே பொது சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்று கூறிய நாடு ஜெர்மனி. அதன் பலன்கள் தான் தற்போது ஜெர்மனியை கொரோனாவில் இருந்து பாதுகாத்து வருகிறது.

மூலக்கதை