மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தினகரன்  தினகரன்

புபனேஸ்வர் : மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த சுதர்சன் பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை உருவாக்கியுள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் இணைந்திருப்போம் என்ற வாசகங்கள் அவரது மணல் சிற்பத்தில் இரும்பெற்றிருந்தது.இதனை பாராட்டும் வகையில் உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் அதானோம் கெப்ரேயுசு உலகிற்கு வலுவான செய்திகளை சொல்ல கலை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு தந்தமைக்கும் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பட்நாயக், உலக சுகாதார அமைப்பின் தலைவரிடம் இருந்து எனக்கு பாராட்டு கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கலைஞராக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமது பொறுப்பு என்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்றும் பட்நாயக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக செவ்வாயன்று, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மணல் கலை மூலம் கோவிட் -19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியைப் பாராட்டினார்.பத்மஸ்ரீ விருது பெற்ற பட்நாயக், உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார்.

மூலக்கதை