டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஓராண்டுக்கு தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஓராண்டுக்கு தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ: கொரோனா பீதி அதிகரித்து வரும் சூழலில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு  தள்ளி வைப்பதாக ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார். இந்த ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்  ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குவதாக இருந்தது.  அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தன.எனினும், போட்டியை நடத்துவதில் ஜப்பான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) உறுதியாக இருந்தன. கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடரும் மார்ச் 20ம் தேதி ஜப்பான் போய் சேர்ந்தது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் அபே தலைமையில் ஐஓசி தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ‘வீரர்களின் நலன், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக’ அறிவித்தார்.

மூலக்கதை