நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து

புதுடெல்லி: நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும், மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று, டெல்லி மெட்ரோ சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும். அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இன்று முதல் திங்கள் வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து டெல்லி சந்தைகளை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், மருந்துகள், பால் மற்றும் மளிகைக் கடைகள் மூடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட 2019 சிவில் சர்வீஸ் தேர்வுக்கான மீதமுள்ள நேர்காணல்களை மத்திய பொது சேவை ஆணையம் ஒத்திவைத்தது. நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நீரிழிவு நோய், சுவாச பிரச்னைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் போன்ற நிபந்தனைகளைக் கொண்ட அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி வரை மருத்துவ சான்றிதழின்றி பயண விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் பொது ஊரடங்கு உத்தரவால், 3,700 ரயில்கள், டெல்லி மெட்ரோ மற்றும் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படும். டெல்லி உட்பட பல நகரங்களில் மால்கள், சினிமா அரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்களும் மூடப்படும்.

இந்திய ரயில்வே அறிவிப்பின்படி, நாளை நாடு முழுவதும் தினமும் 2,400 பயணிகள் ரயில்கள் மற்றும் 1,300 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களின் பணம் அனைத்தும் பயணிகளுக்கு திருப்பித் தரப்படும்.

இந்தியாவில் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது நிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இரண்டு உள்நாட்டு விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கோ ஏர் நிறுவனம் தனது உள்நாட்டு விமானங்கள் அனைத்தையும் நாளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இடிகோ 40% விமானங்களை மட்டுமே இயக்குவதாகக் கூறியுள்ளது.

இரு நிறுவனங்களின் முடிவால் நாளை ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை