கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தெலங்கானாவில் 13 ஆக உயர்வு: முதல்வர் அவசர ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தெலங்கானாவில் 13 ஆக உயர்வு: முதல்வர் அவசர ஆலோசனை

திருமலை: கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஆந்திராவில் 2ஆகவும், தெலங்கானாவில் 13ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் தெலங்கானா முதல்வர் இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் நெல்லூரை சேர்ந்த வாலிபர், இத்தாலி சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது ெதரியவந்தது.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த வாலிபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு வந்த மேலும் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் 109 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 94 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 13 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 16ம் தேதி இந்தோனேஷியாவில் இருந்து வந்த 7 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்ல ராஜேந்திரா கூறுகையில், தெலங்கானாவை சேர்ந்த ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதால் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.


.

மூலக்கதை