கொரோனா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்வு; ‘கிட்’ பற்றாக்குறையால் பாகிஸ்தானில் ஸ்டிரைக்: ராணுவ மருத்துவர்களை அழைக்க கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்வு; ‘கிட்’ பற்றாக்குறையால் பாகிஸ்தானில் ஸ்டிரைக்: ராணுவ மருத்துவர்களை அழைக்க கோரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொேரானா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் ‘கிட்’ பற்றாக்குறையால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ மருத்துவர்களை பணிக்கு அழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் 301 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரபடி முதன்முறையாக இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பெரும்பாலானோர் ஈரானுக்கு யாத்திரை சென்றவர்களுடன் தொடர்புடையவர்கள். ெகாரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஈரானில் தற்போது 17,360க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 638 பேர் பலியாகி உள்ளனர்.



பாகிஸ்தானின் இருந்து 960 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரான் உள்ளதால், எளிதில் மக்கள் சென்று வருகின்றனர். கடந்த மார்ச் 16 முதல் தப்தான் எல்லை மூடப்பட்டுள்ளது.

ஆனால் ஈரானில் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஷியா யாத்ரீகர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கொரோனா வைரஸ் வழக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பதிவாகியுள்ளது.

அங்கு சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பி வந்த 45 வயது நபருக்கு கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள் 1,015,900க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை திரையிட்டு சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பொதுத்துறை மருத்துவமனைகளில் ‘கிட்’ (சிகிச்சைக்கான மருத்துவ சிறப்பு உபகரணம்) பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களுக்கு பிற முன்னெச்சரிக்கை கருவிகளை வழங்காததை எதிர்த்து அம்மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, கிராண்ட் ஹெல்த் அலையன்ஸ் (ஜிஹெச்ஏ) தலைவர் சல்மான் ஹசீப் கூறுகையில், ‘‘நோய்வாய்ப்பட்ட மக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.

டாக்டர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடிகிறது. சுகாதார அதிகாரிகள் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 1,200 கிட்களை மட்டுமே வழங்கினர்; அது போதாது.

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் சேவையை அரசு அமர்த்த வேண்டும். கொரோனா தடுப்பு  கருவிகள் வழங்கப்படாவிட்டால் அவசர வார்டுகளில் சேவைகளையும் நாங்கள் நிறுத்துவோம்” என்றார்.


.

மூலக்கதை