கொரோனா பரவுவதை தடுக்க சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சகம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பரவுவதை தடுக்க சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக, சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகள் வரும்  31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகளும் வரும் 31ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.



தேர்வுகள் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறுகையில், ‘‘மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான அனைத்து வாரிய தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.

புதிய தேதிகள் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும். மார்ச் 19 முதல் மார்ச் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும்.

அனைத்து மதிப்பீட்டு பணிகளும் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்படும்’’ என்றார். இதற்கிடையில், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான ஐசிஎஸ்இ வாரிய தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை.

இதுகுறித்து, வாரிய தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் கூறுகையில், “தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை; தற்போதுள்ள அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும்” என்றார்.


.

மூலக்கதை