கன்னையாகுமார் மீது தேசவிரோத வழக்குப்பதிவு; அனுமதி அளித்த டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

தினகரன்  தினகரன்
கன்னையாகுமார் மீது தேசவிரோத வழக்குப்பதிவு; அனுமதி அளித்த டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையாகுமார் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கன்னையாகுமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி கேட்டு டெல்லி அரசிடம் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் காவல்துறை அனுமதி கோரியது. அப்போது தேசதுரோக வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்ட ஆம் ஆத்மி அரசு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தற்போது அனுமதி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தேசதுரோக வழக்குப்பதிவு செய்வதில் மத்திய அரசுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியே டெல்லி அரசு பணிந்து வர காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி அரசு கொடுத்துள்ள அனுமதி காரணமாக கன்னையாகுமார் மட்டுமல்லாமல் உமர் காலித், பட்டாச்சார்யா மீதும் தேசதுரோக வழக்கு தொடரப்படும்.

மூலக்கதை