டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது: ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் பேச்சு!

தினகரன்  தினகரன்
டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது: ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் பேச்சு!

ஜெனீவா: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் கூறியுள்ளார். ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43வது ஆலோசனை கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் மிச்சேல் பேச்லட், டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது போன்றவை மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்களும், பெருமளவில் அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும், இந்தியாவில் நீண்டகாலமாக இருந்து வந்த மதசார்பற்ற கலாசாரத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லி கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது, போலீசார் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள். மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் ஏவி விடப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட போதிலும் இன்னும் 800 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இயல்புநிலை திரும்பவில்லை. அதிகளவில் ராணுவங்களை குவித்திருப்பதன் மூலம் பள்ளிகள், வியாபார நிறுவனங்கள், மக்களின் வாழ்க்கை அனைத்துக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக படை குவித்திருப்பதை குறைக்கவோ, பாதுகாப்பு படையினரால் மனித உரிமை மீறல் நடப்பதை தடுக்கவோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இணையதளம், மொபைல் சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர், என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை