டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்

புதுடெல்லி: டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 1-ம் தேதி டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்க உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக கலவரப்பகுதிகளில் மட்டுமின்றி பிற இடங்களிலும் டிரோன்கள் மூலம் போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். நகரில் குவிக்கப்பட்டுள்ள  போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் மரண ஓலம்தான் கேட்கிறது. பலர் தங்கள் உறவுகளின் உடல்களை பெறுவதற்காக சவக்கிடங்கு முன்பாக காத்து கிடக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது குடும்பத்தினரின் உறவுகளை இழந்த நிலையில், இன்னும் பலர் தங்களது வீடுகள், கடைகளை இழந்து வாழ்வாதாரம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசார் தரப்பிலும் பலர் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு விசாரணை குழுக்களை டெல்லி போலீசார் தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 48 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 130 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை