கிராமசபை கூட்டத்தில் மதுக்கடை வேண்டாமென முடிவெடுத்தால் நடைமுறைபடுத்த என்ன தயக்கம்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
கிராமசபை கூட்டத்தில் மதுக்கடை வேண்டாமென முடிவெடுத்தால் நடைமுறைபடுத்த என்ன தயக்கம்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: மதுபான கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.   அப்போது தமிழக  அரசு தரப்பில் ஆஜரானஅட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடும்போது, 2004 முதல் 2020 வரை 35 சதவிகித மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.  மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை 12 மணியில் இருந்து தற்போது 10 மணி நேரமாக அரசு குறைத்துள்ளது. நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை, சிஏஏ, நீட் போன்ற மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு  பரிசீலிக்கப்படும்.  இதைக்கேட்ட நீதிபதிகள், மதுபான கடைகள் அமைப்பதற்கு முன் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்க கூடாது?  டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்? தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன் பின் அதை கடைபிடிப்பதில்லை. மது விற்பனையை தடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையை வைத்து தமிழக அரசு மது விற்பனை  செய்கிறது.கோயில்கள் உள்ள பகுதிகளில் அசைவ உணவு கடைகள் வைக்க கூடாது என்று அறிவித்த அரசு, மதுபான கடைகள் வைக்க கூடாது என்று ஏன் அறிவிக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு,  மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று உறுதியளிக்க முடியுமா? கடந்த 2017ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான நடைமுறை குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பிறப்பித்த சுற்றிக்கையை ஏன் சட்டமாக்கவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.பின்னர், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தமாக கொண்டு வருவது குறித்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதிகள்  தள்ளிவைத்தனர்.

மூலக்கதை