அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

கடப்பா: 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சண்டிகர் - அருணாச்சல பிரதேச அணிக்கும் இடையே 50 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற்றது. சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பந்து வீச்சாளர் காஷ்வீ கவுதம் (16) என்பவர் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளை தனி ஒருவராக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

முதலில் விளையாடிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. காஷ்வீ கவுதம் 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து பந்துவீசிய சண்டிகர் அணியின் கேப்டன் காஷ்வீ கவுதம் 4. 5 ஓவர்கள் வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில், ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனால் அருணாச்சலப் பிரதேச அணி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் காஷ்வீ கவுதம் இதற்கு முன்பு பீகார் அணியுடனான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
 
சண்டிகர் அணி அடுத்ததாக புதுச்சேரி அணியுடன் மோதுகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அணில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்தார்.

தற்போது, சண்டிகரைச் சேர்ந்த 16 வயதான நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கவுதம் பிசிசிஐ-யின் உள்நாட்டு போட்டியில் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளது.

.

மூலக்கதை