துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு

லண்டன்: இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி முதல் ஆகஸ்டு 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் நீக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.

இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து காமன்வெல்த் நிர்வாகிகள் கடந்த ஆண்டில் இந்தியா வந்து, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றும் அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பெயரை காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இறுதிபதக்க பட்டியலுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தற்போது இந்த பிரச்னைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் லண்டனில் நடந்தது. கூட்டத்தில், ‘2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் (சண்டிகாரில்) காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்படும்.

பதக்கம் வெல்லும் நாடுகளின் பட்டியலை, காமன்வெல்த் விளையாட்டு போட்டி முடிவடைந்த ஒரு வாரத்தில் பதக்கபட்டியலுடன் இணைத்து இறுதி பட்டியல் வெளியிடப்படும்’ என்று தீர்மானிக்கப்பட்டது. துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான செலவுகளை தேசிய ரைபிள் சங்கமும், வில்வித்தை போட்டிக்கான செலவுகளை மத்திய அரசும் ஏற்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் ஆகியவை வரவேற்று இருக்கின்றன.

.

மூலக்கதை