இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வெலிங்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் (34), பிரித்வி ஷா (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இந்திய அணி குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தனர். அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்களுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாள் போட்டி நடைபெற்றது.  அதன் முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரன்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் பிளண்டெல் ஆகியோர் விளையாடினர். அந்த அணியில் அதிக அளவாக வில்லியம்சன் (89), டெய்லர் (44) ரன்களில் ஆட்டமிழந்தனர். லாதம் (11), பிளண்டெல் (30), நிக்கோல்ஸ் (17) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 71.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. வாட்லிங் (14), கிராண்ட்ஹோம் (4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனை அடுத்து நேற்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்கள் குவித்தது. இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை வகுத்தது.இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அரை சதம் (58) விளாசினார். பிருத்வி ஷா (14), புஜாரா (11) மற்றும் கோலி (19) ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து இந்திய அணி 65 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே (25), விகாரி (15) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.  நேற்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 39 ரன்கள் பின்தங்கி இருந்தது.இதனை தொடரந்து இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஹானே (29), விகாரி (15), பண்ட் (25), அஸ்வின் (4), இஷாந்த் சர்மா (12), பும்ரா (0) ரன்களில் வெளியேறினர். இதனால் 81 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்திருந்தது. முகமது சமி (2) ரன்களுடன் களத்தில் நின்றார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 9 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாதம் (7), பிளண்டெல் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 1.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 9 ரன்களை சேர்த்தது. எனவே நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

மூலக்கதை