ராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து

தினகரன்  தினகரன்
ராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தவிர வேறு சிறந்த நபர் யாருமில்லை. இருப்பினும், அவர் இப்பதவியை ஏற்க விரும்பாத பட்சத்தில், புதிய தலைவரை தேர்தல் மூலமாக தேர்ந்தெடுத்தால்தான் கட்சி பலப்படும்,’’  என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விலகினார். அதன்பின் இடைக்கால தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சி தத்தளிக்கிறது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் மறுமலர்ச்சி ஏற்பட நீண்ட கால தலைவர் யார் என்ற பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். இது குறித்து சசசிதரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவராக மீண்டும் திரும்ப வேண்டுமா என்ற முடிவை ராகுல் காந்திதான் எடுக்க வேண்டும். தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்ற விரும்பவில்லை என்றால், தீவிரமாக பணியாற்றும் முழு நேர தலைவரை காங்கிரஸ் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நாடு எதிர்பார்க்கும்படி காங்கிரஸ் கட்சி முன்னேறி செல்ல முடியும்.பா.ஜ.வின் பிரித்தாளும் கொள்கைக்கு இன்றியமையாத மாற்று காட்சி காங்கிரஸ்தான். ஆனால், மக்கள் பார்வையில் காங்கிரஸ் தத்தளிப்பது போன்று தோன்றுவது எங்களில் பலருக்கு கவலையளிக்கிறது. இந்த நிலை வாக்காளர்களை தானாகவே, வேறு கட்சியை நோக்கி செல்ல வைக்கும். இதை டெல்லி தேர்தலில் பார்த்தோம். பெரும்பாலான வாக்காளர்கள் ஆம் ஆத்மி பக்கம் சென்றனர். சிலர் பா.ஜ பக்கம் சென்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும். இதை வெளிப்படையான, ஜனநாயக முறையிலான உள்கட்சி தேர்தல் மூலம் செய்தால், யார் தேர்வு செய்யப்பட்டாலும், கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி எப்போதும் சிறப்பான இடத்தை தக்கவைப்பார். காங்கிரஸ் கட்சியை ஒன்றாக முன்னோக்கி கொண்டு செல்லும் தொலைநோக்கு அவருக்கு உள்ளது. அதனால்தான் அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். ஆனால், தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகியதற்கு நாங்கள் மதிப்பளித்த போதும், சிறந்த நபர் வேறுயாரும் இல்லை என்பதை உணர்ந்தோம். பதவி விலகியது அவரது தனிப்பட்ட முடிவு. மீண்டும் திரும்ப வருவதும் அவரது தனிப்பட்ட முடிவுதான்.காங்கிரஸ் செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 பிரிவினர் உள்ளனர். இந்த 3 பிரிவினருமே, காங்கிரஸ் மேலிடத்தால் நியமிக்கப்படுபவர்கள்தான். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்’ உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டால் அது கட்சிக்கு ஆரோக்கியமாக இருக்கும் என நான் நம்புகிறேன். அகில இந்திய காங்கிஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி நடக்கும் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டால் கட்சி வலுவடையும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வர விரும்பும் எந்த தலைவருக்கும் நான் எதிரானவன் அல்ல என்றார்.

மூலக்கதை