கொரோனா வைரஸ் பலி எதிரொலி: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை பிரகடனம்...அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு
பீஜிங்: சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2345 லிருந்து 2,442 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சீனா சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு குழுவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை உயர்வு எதிரொலி காரணமாக கம்யூனிஸ்ட் சீனாவில் \'மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை\' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2500ஐ எட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா, தென்கொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கடந்த 1-ம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.